உலகின் கவனத்தை சீனா மீது திருப்பியுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப வைபவம் தலைநகர் பெய்ஜிங்கில் கோலாகலமாக இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் மீது ஒலிம்பிக் தீபம் ஏந்திச்செல்லப்பட்டது. புறாக்கள் பறக்கவிடப்பட்டதுடன் பல வர்ண காகித மழைகளும் பொழிந்தன.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட உலக நாடுகளின் பல தலைவர்கள் ஒலிம்பிக் போட்டியின் அங்குரார்ப்பண விழாவை கண்டுகளிக்க சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பெய்ஜிங்கிற்குச் சென்று கொண்டிருந்த வேளையிலும் சீனாவின் மனித உரிமை விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் கடுமையான தொனியில் விமர்சித்திருப்பதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்தது. இதேவேளை, விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் 40க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டுத்துறை சார்ந்தவர்களென்ற எல்லையை தாண்டிச் சென்று அதாவது அரசியலுக்கும் விளையாட்டுக்குமிடையிலான எல்லைக்கோட்டை தாண்டிச் சென்று திபெத் பிரச்சினைக்கு சீனா சமாதானத் தீர்வு காண வேண்டுமெனவும் பேச்சுச் சுதந்திரம், மதச்சுதந்திரம் என்பவற்றை பாதுகாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
அதேசமயம், சீனாவின் 130 கோடி மக்களும் இன்றைய ஒலிம்பிக் ஆரம்ப வைபவத்தையிட்டு உணர்ச்சிவசப்பட்டவர்களாக காணப்படுவதுடன் வைபவத்திற்கு தயாராகிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒலிம்பிக் ஆரம்ப வைபவமானது சீனாவின் பண்டைய வரலாற்றையும் நவீன முகத்தையும் வெளிப்படுத்துவதாக அமையுமென எதிர்வுகூறப்படுகிறது. ஒலிம்பிக் தீபம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தன. ஆனால், ஒன்று கூடி மகிழ்வடைவதற்கான தருணம் இது, என்று சீனப் பெருஞ்சுவரில் இடம்பெற்ற ஒலிம்பிக் தீபம் கொண்டு செல்லப்படும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவர் கூறியிருக்கிறார். பல்லாயிரக்கணக்கானோர் கொடிகளை அசைத்துக் கொண்டு நடனமாடியும் பாடிக்கொண்டும் சென்றனர். இது ஒலிம்பிக்கை சீனர்கள் எவ்வளவு தூரத்திற்கு நேசிக்கின்றனர் என்பதைக் காட்டுகின்றது என்றும் அந்த மாணவன் குறிப்பிட்டுள்ளார். தேசப்பற்றுப் பாடல்கள் ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்பப்பட்டன. அந்த ஓசை சீனப் பெருஞ்சுவரில் எக்காளமிட்டதாக ரொய்ட்டர் நிருபர் கூறுகிறார். மேளங்கள் இசைக்கருவிகளும் உற்சாகமாக முழங்கின. சீனர்களுக்கு 8 அதிர்ஷ்ட இலக்கம். அதனால் ஒலிம்பிக் ஆரம்ப வைபவத்திலும் அந்த 8 இலக்கத்தை சீனர்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
புத்தாயிரமாம் ஆண்டின் எட்டாவது வருடத்தில் எட்டாவது மாதத்தில் எட்டாவது நாளில் எட்டு மணித்தியாலத்தில் 8 செக்கன்களில் இந்த நிகழ்வை அவர்கள் இன்று ஆரம்பிக்கின்றனர்.
ஆரம்ப வைபவத்திற்கு முன்பாக 80 நிமிடங்கள் அவதானித்துக் கொண்டிருப்பதென ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
08.08.08. இல் உத்தியோகபூர்வ வைபவம் ஆரம்பமாகும். 2 1/2 மணித்தியாலங்கள் இந்நிகழ்வு இடம்பெறும். சீனாவின் லீ ஹபிவான் மற்றும் பிரிட்டனின் சாரா பிரைட்மான் ஆகியோர் பாடல் இசைப்பாளர்கள் இதனை பெய்ஜிங் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் பணிப்பாளர் ஷால் ஹெப்பிங் செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்துள்ளார்.
ஆரம்ப வைபவமாக 75 80 நிமிடங்களுக்கான நிகழ்ச்சியொன்று இடம்பெறவுள்ளது. கிராமிய மற்றும் இனக்குழுமங்களின் கலைநிகழ்ச்சிகளைக் கொண்ட இந்நிகழ்வில் 28 குழுக்கள் பங்குபற்றுகின்றன.
இந்நிகழ்வின் பிரதான அம்சமான கலை நிகழ்வு ஒரு மணித்தியாலம் இடம்பெறும். இது இருபகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. ஒருபகுதி சீனாவின் பழம்பெரும் நாகரிகத்தையும் மற்றையது நவீன வரலாற்றையும் சித்திரிப்பதாக அமையும். நிகழ்ச்சியின் இறுதியில் கருப்பொருள் பாடல் இசைக்கப்படும்.
வைபவத்தின் பிரதான நிகழ்ச்சி உத்தியோகபூர்வ நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு 2 1/2 மணித்தியாலங்கள் இடம்பெறும்.
இது இவ்வாறிருக்க,முன்னொருபோதுமில்லாத வகையில் பெய்ஜிங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 1 இலட்சம் படை வீரர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல இலட்சம் பார்வையாளர்கள் ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டுகளிக்கவுள்ளனர். 10,500 விளையாட்டு வீர, வீராங்கனைகளும் 30 ஆயிரம் தொண்டர்களும் அதேசமயம் 30 ஆயிரம் ஊடகவியலாளர்களும் பெய்ஜிங்கில் குழுமியிருக்கின்றனர். |