அலிஉதுமான்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு என்னென்ன தேவைகளும், பிரச்சினைகளும்,ஒடுக்குமுறைகளும் ,புறக்கணிப்புகளும் இருக்கின்றதோ, அவ்வளவும் அம்பாறை வாழ் தமிழ் சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் தங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளும் சில சலுகைகளைக் கூட அம்பாறை மாவட்ட தமிழ் மக்களால் இதுவரை காலமும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.அதற்கான பலமான அரசியல் பிரதிநிதித்துவமும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கவில்லை.
இனப்பிரச்சினை கூர்மையடைந்திருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இனமும், மக்கள் பிரிவும் தங்களது உரிமைகளையும்,தேவைகளையும்,அபிலாசைகளையும் இன்னொரு இனத்தின் கீழ் இருந்து பெற்றுக்கொள்வது என்பது நடைமுறை சாத்தியமானதல்ல.ஒவ்வொரு இனமும்,மக்கள் பிரிவும் தங்களது இனம் சார்ந்து சிந்தித்து செயற்படவே இதுவரை காலமும் முடிந்திருக்கிறது.மனித இனம் சார்ந்து சிந்தித்து செயற்படும் தலைவர்கள் எந்த ஒரு இனத்திலும் இதுவரையிலும் தோன்றாமல் இருப்பது இலங்கை வாழ் இனங்களின் துரதிஸ்டமே.
இவ்வாறான சூழ்நிலையில்தான் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் கோரிக்கை த.மனோகரன் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.அம்பாறை தமிழ் மக்களின் சில அபிலாசைகளை, தேவைகளை மறைந்த அமைச்சர் அஸ்ரப் அவர்கள் வழங்கியிருந்தார் என கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார்.அஸ்ரப் அவர்களின் மறைவுடன் அந்த சலுகைகளும் கூட மறைந்து விட்டது என்ற கட்டுரையாளரின் ஆதங்கம் ,ஒடுக்கப்படும் மக்களிடம் இருந்து வெளிப்படும் வேதனையை வெளிக்காட்டி நிற்கின்றது.எந்த இனத்திற்கும் உரிய உரிமைகளை யாரும் சலுகையாக வழங்க வேண்டும் என எந்த இனமும் எதிர்பார்க்கக் கூடாது.சலுகைகளில் இருந்து உரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது என்பதே வரலாறாகும்.
மறைந்த அஸ்ரப் அவர்கள் மானுடத்தின் சமத்துவத்தை தனது கொள்கையாக வரிந்து செயற்பட்ட ஒருவரல்ல. .இலங்கையில் உள்ள எல்லா இன தலைவர்களையும் போல் அவர் தனது இனம் சார்ந்து செயற்பட்ட ஒருவரே.தனது தேர்தல் வெற்றிக்காக அம்பாறை தமிழ் மக்களின் வாக்குகளை பெற வேண்டிய தேவையின் அடிப்படையில் வழங்கப்பட்ட சலுகைகளே கட்டுரையாளர் குறிப்பிட்ட சலுகைகளாகும்.ஒரு இனத்தின் உரிமைகளை எதிர் காலத்தில் மறுப்பதற்காக வழங்கப்படும் சலுகைகள் விடயத்தில் எந்த ஒரு இனமும் மிகக் கவனத்துடன் செயற்படுவது முக்கியமானதாகும்.
ஒரு இனத்தின் உரிமைகளைப் பெற புறப்பட்ட அஸ்ரப் அவர்கள் மற்றொரு சிறுபான்மையினரின் உரிமைகள் விடயத்தல் அலட்சியமாக இருந்ததும்,எதிர்கால தேர்தல் வெற்றிக்காக தேசிய ஐக்கிய முன்னணியை ஆரம்பித்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற எத்தனித்து தமிழ் இன போர் வெறியரான பிரபாகரனால் படுகொலை செய்யப்பட்டதும் இன உணர்வு கூர்மையடைந்துள்ளது என்பதற்கான வரலாற்று உதாரணங்களாகும்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களையும்,தலைமைகளையும் பொறுத்தவரை ஒவ்வொரு பிரதேசத்தவரும் தமது பிரதேசம் என்று மட்டும் சிந்தித்து செயற்படக்கூடியவர்கள்.தமது பிரதேசத்திற்கு அப்பால் ஒரு அணுவை விட்டுக் கொடுப்பதற்கும் கூட மனோவளம் இல்லாதவர்கள்.தனது இனத்துக்குள்ளேயே மற்றொரு பிரதேசத்திற்கு விட்டுக்கொடுக்க மனமில்லாத பிரதேசவாதம் கொண்டவர்களிடம்,அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமது உரிமைகளை கேட்டு பெற முடியும் என்று ஒரு போதும் ந்pனைக்கக் கூடாது.இதே போன்றுதான் மட்டக்களப்பு முஸ்லிம் மக்களால் தமிழ் பிரதேசவாதிகளிடம் கேட்டுப் பெற முடியவில்லை.மட்டக்களப்பில் முஸ்லிம்கள் பெற்றுக் கொண்ட தனியான பிரதேச செயலக பிரிவுகள்,தனியான பேரூந்து டிப்போக்கள்,முஸ்லிம் கல்வி வலயம் என்பன தமிழ் கடும் போக்குவாதிகளினதும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பெறப்பட்டவைகளே.இச் சலுகைகள் அனைத்தும் சிங்கள இனவாதம் கிழக்கு முஸ்லிம்களையும் தலைமைகளையும் தமிழ் மக்களிடம் இருந்து வேறுபடுத்துவதற்கு கொடுத்த வெகுமதிகள் மட்டுமே.
உண்மையில் மட்டக்களப்பில் முஸ்லிம் கல்வி வலயம் உருவாக்கப்பட்ட காலத்தில் அம்பாறையில் தமிழ் கல்வி வலயம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.சிங்கள இனவாதமும் முஸ்லிம் எதிர்ப்பும்,தமிழ் அக்கறையின்மையும் இதற்கு தடையாக இருந்து விட்டது.அம்பாறை மாவட்ட முஸ்லிம்களும்,தலைவர்களும் எதிர்ப்பார்கள் என்பதற்காக தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கவும் முடியாது,காலம் தாழ்த்தவும் முடியாது.தற்போதய சூழ்நிலையில் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள கல்வி வலய விடயம், உட்பட தமிழர்களின் மீள்குடியேற்றம் போன்ற விடயங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான பொருத்தமான காலம் இப்போது கனிந்திருக்கின்றது.கிழக்கு மாகாண சபை நிறுவப்பட்டுள்ளதும்,அம்பாறை மாவட்டத்திற்கான பலமான இளம் தலைவர்கள் (இனிய பாரதி போன்றோர்) அரசியலில் தோன்றியிருப்பதும்,கிழக்கு முஸ்லிம் மக்களின் சக்தியான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்று கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் சக்தியாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பு மக்கள் அங்கீகாரம் பெற்றிருப்பதும் இதற்கான உந்து சக்தியாக அமைகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் 15க்கு மேற்பட்ட தமிழ் கிராமங்களும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் 33க்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களும் கடந்த கால யுத்த நடவடிக்கைகளால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன.இந்த கிராம மக்கள் அனைவரும் அவரவர் சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றப்படுவது மிக மிக முக்கியமானதும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.
கட்டுரையாளர் த.மனோகரன் முன் வைத்த கல்வி வலயக் கோரிக்கையுடன்,மிள்குடியேற்றக் கோரிக்கையும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களால் மக்கள் கோரிக்கையாக முன்னெடுக்கப்பட்டு தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளிடமும் கிழக்கு மாகாண சபை நிர்வாகத்திடமும் உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முன்னெடுக்கப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்திலேயே அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றமும் நடைமுறைப்படுத்தப்படுவது காலத்தின் தேவையாகும். அம்பாறை மாவட்ட தமிழ் மக்களினதும்,மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களினதும் தேவைகளையும்,உரிமைகளையும் நிறைவேற்ற சகல தமிழ்,முஸ்லிம் அரசியல் சக்திகளும் முன்வருமா?
|